தஞ்சாவூர் டிச 25; தஞ்சையில் தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாள் நிகழ்ச்சி பல்வேறு அமைப்புகள் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மாநகர செயலாளர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் மாநகர செயலாளர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர் சேவையா, செந்தில்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இணைசெயலாளர் ராவணன் தலைமை வகித்தார். இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், நிர்வாகிகள் தேவா, அருள், ராஜேந்திரன், சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் இரயிலடியில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட தலைவர் எம்.பி. நாத்திகன் தலைமையில் பெரியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/