தஞ்சாவூர்; தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர் அருகே நாகலூரில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருக்கருகாவூர் அருகே நாகலூர் பகுதியில் கோடை பருவத்தில் பல ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் அறுவடைக்கு முன்பே நெற்பயிர்கள் அழுகி வீணாகக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கி அழுகிவிடும் நிலை உள்ளது.
இதே நிலை நீடித்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்