தஞ்சை சூன் 20: தஞ்சை மாவட்டம் திருவையாறு வேளாண் கோட்டத்தில் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கவும், அதன் இணைப்பு திட்டமான குழாய் பதித்தல் ஆகியவை மானியத்துடன் செயல்படுத்த உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவையாறு வட்டாரத்துக்கு 2021-22-ம் ஆண்ழல் பிரதமர் நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர்பாசன கருவிகள் 450 ஏக்கரில் அமைக்க ரூ. 60 லட்சத்திற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கச் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது.

இதேபோல் இத்திட்டத்தின் இணைப்புத் திட்டமான துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியத்தொகை ரூ. 10 ஆயிரம் மற்றும் மின்மோட்டார் அல்லது ஆயில் இன்ஜினுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் மானியத்தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

நுண்ணீர்பாசன முறையில் குறைந்த அளவு நீரைக்கொண்டு அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்ய இயலும். இதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாகப் பயிரின் வேர்பகுதிக்கு செல்வதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சல் கொடுப்பதோடு களைகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தப்படுகிறது.

குறைந்த அளவு மழைப்பொழிவு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவால் கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரைக்கொண்டு நுண்ணீர்ப் பாசனம் மூலம் பயன்பெறலாம். மேலும் நீர்பாசனம் செய்வதற்கான நேரமும், ஆட்கள் கூலியும் குறைகிறது.

சொட்டு நீர்ப் பாசனம் மூலம் உரம் இடுவதால் பயிருக்குத் தேவையான நீரும், ஊட்டச்சத்தும், சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்கப்பெறுகிறது. இத்திட்டதின் பதிவு செய்து கொள்விரும்பும் விவசாயிகள் தங்களின் அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், குடும்ப அட்டை, கணினி சிட்டா, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவையாறு வட்டார வேளாண் உதவி இயக்குநர் குமரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்