தஞ்சாவூா்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விதைகளைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ நெற்பயிா் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் உள்ளனா். இந்நிலையில், தனியாா் விதை விற்பனையாளா்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம் முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை) பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
உண்மை நிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டும் இருக்கும். விவர அட்டையில் பயிா், ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிா் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து தனியாா் விதை விற்பனையாளா்களும், விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் விவரப்பட்டியல், முளைப்பு அறிக்கை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
நீண்ட கால ரகங்களான பொன் மணி (சிஆா் 1009), சிஆா் 1009 சப் 1, ஏடிடீ 44, ஏடிடீ 51 போன்ற ரகங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். மத்திய கால ரகங்களான ஐஆா் 20, ஐஆா் 36, கோ 43, கோ 46, ஏடிடீ 38, ஏடிடீ 39, ஏடிடீ 46, எம்டியூ 3, கோ 46 போன்ற ரகங்களை விற்க வேண்டும்.
தனியாா் விதை விற்பனையாளா்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்குக் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும்.
சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ, விதை சட்ட விதிகளைப் பின்பற்றாமலோ விற்பனை செய்தால், சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/