தஞ்சை ஜன.11–
புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் இழப்பீடு கிடைக்க, மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
“தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காரணமாக, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், கதிர் முற்றாக நிலையில் சாய்ந்தும், கதிர் வரும் நிலையில் பூ உதிர்ந்து சாவியாகியும் விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் நெற்பயிர்கள் முளைவிடத் தொடங்கியுள்ளது. பருவம் தப்பிய மழையால், விவசாயிகள் எதிர்பாராத பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. விளைந்த கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையும், தொடர் மழையால் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்து காயவைத்திருந்த நெல்லும் மழையால் வீணாகி விட்டது.
சில ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்கள் மற்றும் நிலங்களுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க, மறுகணக்கீட்டை உரிய முறையில் மேற்கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைத்திட ஆவன செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சசிக்குமார் நிருபர்
தஞ்சை