தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டாமாற்றம், கல்விகடன் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 406 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடன் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பள்ளிஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்ற பயனாளிக்கு ரூ.30ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைக்க நிதிஉதவி தொகைக்கான காசோலை, பேராவூரணி வட்டம், ரெட்டைவயல் உக்கடை பகுதியை சேர்ந்த பாண்டிமீனா என்றபயனாளிக்கு ரூ.11 ஆயிரம் மதிப்பில் கல்லூரி கட்டணம் செலுத்த நிதிஉதவி தொகைக்கான காசோலையும் வழங்கினார்.
மேலும் ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு ரூ. 10ஆயிரம் மதிப்பில் இணையவழிக் கல்விபயில செல்போன் வாங்குவதற்கு நிதி உதவி தொகைக்கான காசோலை, அதிராம்பட்டினம் ஜாலியாரோடு பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஐஸ் கம்பெனிக்கு கீற்றுக் கொட்டகை அமைப்பதற்கு நிதிஉதவித் தொகைக்கான காசோலை என மொத்தம் ரூ.71 ஆயிரம் மதிப்பில் கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார்.
மேலும் தமிழ்நாடுசிறுபான்மையினர் நலஆணையத்தின் தலைவரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ஒருபயனாளிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாலைதவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜன் நிருபர்
https://thanjai.today/