தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களின் பயன்பாட்டிற்காக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பாட்டிற்காக நான்கு பேர் பயணம் செய்யும் அளவில் பேட்டரி கார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த பேட்டரி கார் சேவை தொடங்க கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று ரயில்வே நிர்வாகம் இச்சேவையை தொடங்கியுள்ளது.
கும்பகோணத்திலிருந்து வெளியூர் செல்லும் அல்லது வெளியூரில் இருந்து கும்பகோணம் வரும் பயணிகளில் பலர் வயது முதிர்ந்தோராகவும், ஊனமுற்றோர்களாகவும் மற்றும் கர்ப்பிணி பெண்களாகவும் உள்ளனர்.
இவர்களின் வசதிக்காக ரயிலில் ஏறவும், இறங்கவும் நடைமேடையில் நடந்து செல்ல வேண்டும் என்ற காரணத்தால் ஷட்டில் கார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தாமாக முன்வந்து ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4 லட்சம் மதிப்புள்ள பேட்டரி கார் ஒன்றை கும்பகோணம் மக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த வாகனத்தில் ஓட்டுனரை சேர்த்து நான்கு பேர் பயணம் செய்யலாம். 24 மணி நேரமும் பயணிகளின் பயன்பாட்டிற்கு உள்ள இந்த வாகனத்திற்கு அந்த தனியார் நிறுவனம் சார்பாக சுழற்சி முறையில் மூன்று ஓட்டுநர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 48 வோல்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தை ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுதும் பயன்படுத்தலாம்.
இந்த பேட்டரி கார் சேவைக்கு கும்பகோணம் மக்கள் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இந்த சேவைக்கு அனுமதியளித்த முதுநிலை கோட்ட வணிக மேலாளருக்கு தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/