தஞ்சாவூர் அக் 27: தமிழ்நாடு அரசில் ஆளுநரின் தலையீடு தேவையற்றது என்று மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தொடர்ந்து பலவீனமாகி வருவதால், அந்த இடத்தை பாஜக கபளீகரம் செய்து தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் முழுமையாக நிராகரித்தபோதும் அதிமுகவின் இயலாமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடித்துக் கொள்ளப் பல்வேறு முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது.
அதில் ஒரு கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையிலும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் செயல்படுகிற இந்த ஆட்சியின் மீது இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நிர்வாகம் மற்றும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், சீர்குலைக்கும் விதத்திலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. தமிழக ஆளுநர் மாநிலத்தின் அனைத்துத் துறைத் தகவல்களும் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளுநரின் அதிகாரத்தைத் தமிழக முதல்வர் மதிக்கத் தெரிந்தவர். ஆனால் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு வரம்பு மீறி செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசுச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஆளுநரின் தலையீடு தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாகராஜன் நிருபர்
https://thanjai.today/