தஞ்சாவூர் சூலை 31: தஞ்சை மாவட்டம் அலிவலத்தில் ஈரப்பதம் இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அலிவலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் அலிவலம், காயாவூர், சீதம்பாள்புரம், குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கடந்த 20 தினங்களாக விவசாயிகளிடம் ஈரப்பதம் மற்றும் நெல்லின் தரத்தை காரணம் காண்பித்து நெல்கொள்முதல் செய்வதை தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சாலைகளின் இருபுறமும் வயல்வெளியிலும் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்துகிடக்கும் சூழ்நிலை உருவானது .

இதை கண்டித்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக அனைத்து விவசாயிகளின் நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பட்டுக்கோட்டை- மதுரை சாலையில் அலிவலம் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா சம்பவ இடத்திற்கு வருகை தந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

சாலை மறியலால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/