தஞ்சாவூர்: கொரோனா மூன்றாவது அலை குழந்தைகள் தாக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை. இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளுக்கு என்று சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி கொரோனா சிகிச்சை மையம், வல்லம் சிகிச்சை மையம், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் இராசமிராசுதார் மருத்துவமனையில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அங்கு தயார் நிலையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்சிசன் படுக்கைகளை ஆய்வு செய்தார், பின்னர் கருப்பு பூஞ்சையினால் நோயினால் பாதிக்கப்பட்ட குணமடைந்த 15 பேரை அவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகள் தாக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை. அது யூகத்தின் அடிப்படையில் வந்த தகவல்தான். இருந்தாலும் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு என்று சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு முழுவதும் 70000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் வந்தது. அதில் ஒரு கோடியே 5 லட்சம் ஊசிகள் வரை போடப்பட்டுள்ளது. இன்று மட்டும் 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவைகளை மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று வரை மற்றும் 1,736 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், தொடர்ந்து வீடு திரும்பி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.