தஞ்சை, நவ.19-ஜெய்பீம் படம் குறித்து இரு கட்சிகள் மட்டுமே அவதூறும், மிரட்டலும் விடுத்து வருகின்றன. தங்களது கட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும் இரு கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இந்தக் குறுகிய நோக்கம் வெற்றி பெறாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாநிலச் செயற் குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநிலத் துணைச் செயலர் வீரபாண்டியன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சந்தானம், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பங்கேற்ற பின்னர் மாநிலச் செயலர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் போதுமானதல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. எனவே, தற்போதைய அறிவிப்பைத் முதல்வர் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும்.
அரசுக் கட்டிக் கொடுத்த வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தொடர் மழை காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். இவர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டு நிலங்களில் பயிரிடப்பட்ட கடலை உட்பட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே இதுகுறித்து நாளை (20ம் தேதி) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனை செய்து அறிவிக்கப்படும் என நம்புகிறோம்.
தமிழகத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கையை மத்திய உள் துறை அமைச்சரிடம் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கொடுத்து ரூ. 6,629 கோடி வழங்குமாறு கோரியுள்ளார். தமிழக அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். நீடாமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் நடேச. தமிழார்வன் படுகொலை சம்பவம் தொடர்பாக அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஜெய்பீம் படம் குறித்து இரு கட்சிகள் மட்டுமே அவதூறும், மிரட்டலும் செய்து வருகின்றன. இதன் மூலம், தங்களது கட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும் இரு கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இந்தக் குறுகிய நோக்கம் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/