தஞ்சை பிப்.09–

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்திய, மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ 3 ஆயிரம், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 5 ஆயிரம் மாதாந்திர நிவாரண உதவித் தொகையாக வழங்க வேண்டும், கல்வி, வேலை வாய்ப்பில் அரசுத் துறையில் இருப்பது போல, தனியார் துறையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி.சங்கிலிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன், மாவட்ட பொருளாளர் எஸ்.சிவப்பிரியா, மாவட்ட துணைச் செயலாளர் பி.கிரிஸ்டி மற்றும் தஞ்சை மாநகரக் குழு, தஞ்சை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் 67 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற குடியேறும் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் வி.எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் யு.பிரபாகரன், திருவோணம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஆர்.திருமேனி, ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் டி.கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 160 பேர் கைது செய்யப்பட்டனர். 

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற குடியேறும் போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றிய தலைவர் ஜே வின்சென்ட் ஜெயராஜ், பட்டுக்கோட்டை நிர்வாகி நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 11 பெண்கள் உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருவிடைமருதூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், திருப்பனந்தாள் ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 247 பேர் கைது செய்யப்பட்டனர். 

கும்பகோணத்தில் செந்தில்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மணிகண்டன், தமிழரசன், துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 40 பேர் கலந்து கொண்டனர். 

பாபநாசத்தில் மாவட்ட துணைத் தலைவர் கணேசன், ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். சதாசிவம், மகேஸ்வரி, ராஜப்பா முன்னிலை வகித்தனர். 60 பேர் கலந்து கொண்டனர். 

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.