தஞ்சாவூர் ஆக 21: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் ஊராட்சியில் பல்நோக்கு சேவை மைய கட்டட திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு தஞ்சை எம்.பி. பழநிமாணிக்கம், பேராவூரணி எம்எல்ஏ அசோக் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பேசியதாவது:
ஊரக வளா்ச்சி துறை சாா்பில், சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ. 70.94 லட்சம், பொதுமக்கள் பங்குத்தொகை ரூ. 35.46 லட்சம் என மொத்தம் ரூ. 1.06 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடியில் பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டுள்ளது.
இதில், மணமகன், மணமகள் அறை, உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் திருமண நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள ஏதுவாக கட்டப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் முத்துமாணிக்கம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ரீகாந்த், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/